கிராம அபிவிருத்தி பணிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் : கி.மா. முதலமைச்சர்

கிராமங்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி பணிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார். வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், "அபிவிருத்தி எனும் போது, அதன் மையப்புள்ளி கிராமங்களாக இருக்க வேண்டும். கிராமங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு அதிகாரிகள் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும்." என்றும் குறிப்பிட்டார்.வாழைச்சேனை பிரதேச தவிசாளர் கே. உதயஜீவதாஸ் தலைமையில் குகனேசன் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீதி அபிவிருத்தி உட்பட பிரதேச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும், கிராமியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர், "அபிவிருத்தி என்பது ஒரு போதும் எம்மைத் தேடி வராது. நாம் தான் அபிவிருத்தியினைத் தேடிப் போக வேண்டும். அப்போதுதான் நாம் எமது பிரதேசங்களை வெகு விரைவாக அபிவிருத்தி செய்ய முடியும். எமது மாகாணம் பல காலமாக யுத்தத்தின் கோரப் பிடியிலிருந்த ஒரு மாகாணம் என்பதால், முழுமையான அபிவிருத்தியினை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. கட்டம் கட்டமாகவே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.வாழைச்சேனைப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, பாசிக்குடாவை அண்மித்த பிரதேசம் என்பதால், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணம் உல்லாசப் பயணத்துறையில் முன்னேற்றமடைந்து பிரபல்யம் அடையும்.அப்படியான முன்னேற்றம் ஏற்படும் போது, இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அந்த அபிவிருத்தியானது மக்களின் பொருளாதாரத்தை நிச்சயம் முன்னேற்றமடையச் செய்யும்" என்றார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக