பேஸ் புக்' பயனர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவுரை !
வாஷிங்டன் : "பேஸ் புக்' போன்ற சோஷியல் நெட்வொர்க் வலைத்தளங்களில் சுயவிவரங்கள் பதிவதில் எச்சரிக்கை தேவை' என்று இளைஞர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.இணையத்தில் ஆர்குட், பேஸ் புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட் வொர்க் வலைத்தளங்கள் ஏராளமாக செயல்படுகின்றன. பிரிந்த நண்பர்களைத் தேடுதல்; வேலைவாய்ப்புகள்; குழு விவாதங்கள்; சுயவிவரங்கள் வெளியிடுதலுக்கு இந்த வலைத் தளங்கள் உதவுகின்றன.இவற்றில் பேஸ் புக் 2004 ல் தொடங்கியது. 25 கோடி பேர் இதைப் பயன்படுத்துகின்றனர். தினம் மூன்று கோடி பேர் தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். அமெரிக்க வெள்ளை மாளிகை, பத்திரிகைகளை விட பேஸ் புக், ட்விட்டர் போன்றவற்றைத்தான் மக்கள் தகவலுக்குப் பயன்படுத்துகின்றது.வெளிநாட்டவர் சிலர், இந்த வலைத்தளங்களில் தங்கள் படுக்கையறை, குளியலறைக் காட்சிகளைக் கூட வெளியிடுகின்றனர்.
இதனால் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் 13 -18 வயதினரான வளரிளம் பருவத்தினர் பல பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிடுகிறது.இதை மனதில் கொண்டு, வாஷிங்டன் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஒபாமா, வளரிளம் பருவத்தினர் "பேஸ் புக்' போன்ற சோஷியல் நெட்வொர்க் வலைத்தளங்களில் தங்கள் சுயவிவரங்கள் வெளியிடுவதில் கவனம் தேவை என்று கவலையுடன் அறிவுரை கூறியுள்ளார்.
கலந்துரையாடலில் அவர் கூறுகையில்," இந்தப் பருவத்தில் நீங்கள் தவறான முடிவுகள் எடுக்கக் கூடும். பேஸ் புக் போன்ற வலைத்தளங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் உங்களைப் பற்றிய சுய விவரங்களைக் கொடுங்கள். ஏனெனில், நீங்கள் எது செய்தாலும் அது உங்களின் பிற்கால வாழ்வைப் பாதிக்கும். நம் நாட்டையும் பாதிக்கும்,' என்றார்.
ஒபாமாவின் இந்தக் கலந்துரையாடல் நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் போது பல பள்ளிகளில் மாணவர்கள் தூங்கி வழிந்ததையும், வீட்டுப் பாடம் செய்ததையும் சுட்டிக்காட்டி பத்திரிகைகள் கிண்டல் செய்துள்ளன. இதேபோன்று, 1991ல் அப்போதைய அதிபர் புஷ், போதைப் பொருள் பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக