JKR. Blogger இயக்குவது.

சனி, 5 டிசம்பர், 2009

செய்தியறிக்கை


சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர்
சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர்

பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் நாற்பது பேர் பலி

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு அருகிலிருக்கும் மசூதியில் மக்கள் நிறைந்திருந்த நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நாற்பது பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குறைந்தது நான்குபேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். மசூதியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தொழுகை செய்யும் இரண்டு பகுதிகளிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்கே மனிதர்கள் விலங்குகளைபோல படுகொலை செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

தாக்குதல்தாரிகளுடன் பாதுகாப்பு படையினர் சுமார் ஒரு மணித்தியாலம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், இறுதியில் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தம்மீது கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரியும் இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலரும் இந்த மசூதிக்கு வருவது வழமை.


நேட்டோ நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு ஏழாயிரம் கூடுதல் படையினரை அனுப்பவுள்ளன

நேட்டோவின் தலைமைச் செயலரான ரஸ்மியுஸன்
ஆப்கானில் செயற்படும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைக்காக மேலும் ஏழாயிரம் புதிய படையினரை தமது 25 உறுப்பு நாடுகள் அனுப்பவுள்ளதாக நேட்டோவின் தலைமைச் செயலரான அண்டர்ஸ் ஃபொக் ரஸ்மியுஸன் கூறியுள்ளார்.

மேலும் படையினர் வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிபர் ஒபாமாவின் புதிய திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்கா அனுப்பவுள்ள முப்பதினாயிரம் படையினருக்கும் மேலதிகமாக இந்தப் படைகள் அனுப்பப்படவுள்ளன.

தமது செயற்பாடுகளின் ஒருமைப்பாட்டுக்கு இந்த புதிய படையினரின் எண்ணிக்கை ஒரு எடுத்துக்காட்டு என்று ராஸ்முஸன் கூறியுள்ளார்.


படுகொலை முயற்சியில் உயிர் பிழைத்த கினி இராணுவத் தலைவர் மருத்துவ சிகிச்சைக்காக மொராக்கோவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்

படுகொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படும் மெய்க்காவலருடன் கேப்டன் கமரா
கினியின் ராணுவத்தலைவர் கேப்டன் மவுசா டாடிஸ் கமரா, மருத்துவ சிகிச்சைக்காக மொரொக்கோ வந்திருப்பதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேப்டன் கமராவின் பாதுகாவலர்களில் ஒருவர் அவரை கொலை செய்ய முயன்றதைத்தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை காலையில் கினிக்கு வெளியே விமானம் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார்.

கேப்டன் கமரா தீவிரமாக காயமடையவில்லை என்று அரசு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அதேசமயம் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவரான அபுபக்கர் டியகைட் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.


அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைவதாக புதிய புள்ளிவிபரம்

அமெரிக்காவில் நிறைய பேர் வேலை இழந்திருந்தனர்
அமெரிக்காவின் வேலையில்லாதவர்களின் வீதம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 10.2 வீதமாக இருந்து தற்போது 10 வீதமாக குறைந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க இந்த புள்ளிவிபரங்கள் நன்றாக இருக்கின்றன.

இந்தச் செய்தியை அடுத்து பங்குச் சந்தையும், டாலரின் பெறுமதியும் சிறிது அதிகரித்துள்ளன.

ஒரு மாதத்தில் ஏற்பட்ட மாற்றம் வேலைவாய்ப்பு நிலைமை மாறிவிட்டது என்பதை குறிக்காது என்கிற போதிலும், அவை குறிப்பிடத்தகுந்ததுதான் என பிபிசியின் பொருளாதார நிருபர் கூறுகிறார்.


வங்கதேசத்தில் படகு விபத்து

வங்கதேசத்தில் ஒரு படகு இன்னொன்றுடன் மோதியதில் குறைந்த பட்சம் 46 பேர் பலியானதாக வங்கதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை பனிமூட்டத்தில் பெரும் உலோகப்படகு ஒன்று, ஆட்கள் பயணித்த சிறிய அளவிலான மரப்படகில் மோதியதில், மரப்படகு நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைநகர் டாக்காவுக்கு வடக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் இந்தப் படகு மூழ்கிய போது அதில் சுமார் 100 பேர் இருந்தனர்.

ஒரு வாரத்தில் வங்கதேசத்தில் நடந்த ஒரே மாதிரியான இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

நாட்டின் தென்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு துறையில் நங்கூரமிட முயன்றபோது ஒரு படகு மூழ்கியதில் குறைந்தபட்சம் 72 பேர் பலியாகினர்.

செய்தியரங்கம்
இந்திய வெளியுறவு அமைச்சர்
இந்திய வெளியுறவு அமைச்சர்

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது: இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கை அரசு 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

13-வது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக இலங்கை அரசுக்கு சில ஆட்சேபங்கள் இருந்தாலும், அந்தச் சட்டத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றும், 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தையும் தாண்டி தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கூறினார்..

தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதாக எம்.பி.க்கள் கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கிருஷ்ணா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்த நிதியை இலங்கை அரசு பயன்படுத்துவதைக் கண்காணிக்க வழிகாட்டு முறைகள் உள்ளதாகவும், ஐநா. மன்ற அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் மூலமாகவும் கண்காணித்து வருவதாகவும் அமைசச்ர் கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.

மேலும், எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டபடி, இலங்கைக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் ஃபொன்சேகாவை சந்திக்கலாம்: இரா.சம்பந்தர்

அண்மையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்திருந்தார் இரா.சம்பந்தர்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேர்தலில் தாம் யாரை ஆதரிக்கப்போகிறோம் என்பதை பல கட்சிகள் அறிவித்துவிட்டாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது பற்றிய ஒரு நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த புதன் கிழமையன்று இலங்கை ஜனாதிபதியையும் பின்னர் ஐக்கிய தேசியக் கூட்டணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் சந்தித்துப் பேசியுள்ளார்.

தேவைப்பட்டால் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்நிறுத்தப்படும் ஜெனரல் ஃபொன்சேகா அவர்களையும் தாங்கள் சந்திக்க வாய்ப்புண்டு என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன என்றும் சம்பந்தர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பின்போது தாம் தற்போதைய அரசியல் சூழல் பற்றி பேசவில்லை என்றும், தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளை அவரிடம் பேசியதாகவும் சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் யுத்தத்தின் பின்னர் 2500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக புகார்கள் வந்துள்ளன

இலங்கையில் கடந்த மே மாதம் முடிவுக்குவந்த யுத்தத்தின் பின்னர் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டவர்கள், அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களில் இருந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

உறவினர் கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருவதாக காணாமல் போனோரைத் தேடியறியும் குழு என்ற அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த அமைப்பின் பிரதிநிதி மகேந்திரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


உல்ஃபா அமைப்பினரை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது வங்கதேசம்

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரை வங்கதேசம் கைதுசெய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

ஆங்கிலத்தில் சுருக்கமாக உல்ஃபா என்றழைக்கப்படும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அரபிந்த ராஜ்கோவாவை சென்ற வாரம் கைது செய்துள்ள வங்கதேச பாதுகாப்புப் படையினர் தற்போது அவரை இந்திய எல்லைக் காவல் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர ராஜ்கோவா ஆர்வமாக உள்ளார் என்று தெரிகிறது. உல்ஃபா அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது, உல்ஃபா அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதோ என்ற ஊகங்களும் சந்தேகங்களும் எழ வழிவகுத்துள்ளது.

ஆனால் அஸ்ஸாமின் இறையாண்மை குறித்து விவாதிக்க இந்தியா தயாராக இல்லாதவரை அரசாங்கத்துடன் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இதுவரை கைதாகாமல் தப்பிவரும் உல்ஃபா அமைப்பின் இராணுவப் பிரிவு கடும்போக்குத் தலைவரான பரேஷ் பரூவா பிபிசிடம் தொலைபேசி ஊடாகத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத தொடக்கத்திலும் உல்ஃபா அமைப்பின் இரண்டு முக்கியப் பிரமுகர்களை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்திருந்தது.

வங்கதேசத்திலிருந்து செயல்படும் இஸ்லாமிய கடும்போக்காளர்கள் மற்றும் இந்தியப் பிரிவினைவாதிகள் மீது வங்கதேசத்தின் அவாமி லீக் அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.


பருவநிலை மாற்றத்தால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால், தெற்காசிய மக்களின்- அதிலும் குறிப்பாக தமிழர்களின் - பிரதான உணவு தானியமான நெற்பயிரின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் தற்போதைய நிலையில் சராசரியாக இரண்டரை முதல் ஐந்து டன் வரை நெல் விளைகிறது. ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக புவி வெப்படைந்துவருவதால், அடுத்த பத்து ஆண்டுகளில், அதாவது 2020ஆம் ஆண்டுக்குள் தற்போதைய நெல் விளைச்சலில் பதினைந்து முதல் இருபது சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்று வேளாண் விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

அதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அத்தகைய ஆராய்ச்சியை செய்துவருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் வி.கீதாலக்ஷ்மி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010