JKR. Blogger இயக்குவது.

திங்கள், 23 நவம்பர், 2009

செய்தியறிக்கை


பிலிப்பைன்ஸ் வரைபடம்
பிலிப்பைன்ஸ் வரைபடம்

பிலிப்பைன்ஸில் கடத்திக் கொல்லப்பட்டோர் சடலங்கள் கண்டெடுப்பு

பிலிப்பைன்ஸின் தென்பகுதித் தீவான மிண்டனோவாவில், ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களை அங்குள்ள படையினர் மீட்டுள்ளனர்.

அவற்றில் சில சடலங்களில் அவயவங்கள் சிதைக்கப்பட்டிருந்தன.

மகுந்தனாவோ மாகாணத்தில் உள்ள அரசியல் குடும்பங்களுக்கு இடையிலான சாதிச்சண்டையாக இது இருக்கலாம் என்று அந்த இடந்தில் இருந்த ஒரு பேச்சாளர் கூறுகிறார்.

அடுத்த வருடம் நடக்கவிருந்த ஆளுநருக்கான தேர்தலில், தனது கணவரின் வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருந்த ஒரு பெண்ணும் அதில் கொல்லப்பட்டுள்ளார்.

அவரது ஏனைய குடும்பத்தினரும், சட்டத்தரணிகளும், செய்தியயாளர்களும் கூட கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைகளை கொடூரமானவை என்று வர்ணித்திருக்கின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கம், இதனால், தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், உரிய நீதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.


ஆப்கானிய அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணை

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அமைச்சர்களில் குறைந்தது இரண்டு பேர் மீதான ஊழல் புகார்கள் மீது புலனாய்வு செய்யப்படுவதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அரசின் துணைப் பொது வழக்கறிஞர், இவர்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். அதேசமயம் முன்னாள் அமைச்சர்கள் 15 பேரின் ஊழல் தொடர்பிலான புகார்களும் விசாரிக்கப்பட்ட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இதில் சந்தேகிக்கப்படுபவர்களில் சிலர் தாங்களாகவே முன்வந்து விசாரணைகளில் பங்கேற்றிருப்பதாகவும், வெளிநாட்டில் இருப்பவர்களை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவருவதற்கு, சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரண்டாவது முறையாக அதிபர் பதவியேற்ற ஹமித் கர்சாய் அவர்கள், தம் நாட்டில் நிலவுவதாக அவர் கூறிய "குற்றவாளிகள் தவறுக்கு தண்டனை அனுபவிப்பதில்லை" என்ற கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் பாடுபடப்போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


குர்த் இனத்தாருக்கு கூடுதல் இடங்கள் வழங்க இராக் நாடாளுமன்றம் சம்மதம்

புதிய சட்டத்தை வெளியிடும் நாடாளுமன்றக் குழு பிரதிநிதிகள்
இராக்கின் தேர்தல் நடைமுறைச் சட்டங்களில் செய்ய உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பான யோசனைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. பல நாட்கள் விவாதிக்கப்பட்ட இந்த யோசனைகள் இந்த மாதத்தின் முற்பகுதியில் தான் இறுதி செய்யப்பட்டன.

இராக்குக்கு வெளியில் வாழும் மில்லியன் கணக்கான இராக்கியர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவதற்கு இந்த மாற்றங்கள் பரிந்துரை செய்திருந்தன. இந்த மாற்றங்களை இராக்கின் துணை அதிபரும் சுன்னி பிரிவைச் சேர்ந்தவருமான தாரிக் அல் ஹஷிமி அவர்கள் கொண்டுவந்திருந்தார்.

இந்தச் சட்டம் அடுத்ததாக இராக்கிய அதிபர் சபைக்கு மீண்டும் ஒப்புதலுக்காக செல்லும். அங்கே அல் ஹஷிமி அவர்கள் மீண்டும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எதிர்கால நாடாளுமன்றத்தில் குர்து இனத்தவருக்கு கூடுதல் இடங்களை அளிக்க வகைசெய்யும் மற்ற சட்டத் திருத்தங்களுக்கு இராக்கிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் எதிர்கால நாடாளுமன்றத்தில் தங்களுக்கு உரியபிரதிநிதித்துவம் கிடைக்காதோ என்கிற சுன்னி பிரிவினர் பயத்தை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதன் விளைவாக இராக்கின் தேர்தல் சட்டங்கள் தொடர்பான முறுகல் நிலை நீடிக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.


லண்டனில் பொலிசாரால் தவறுதலாகக் கொல்லப்பட்ட பிரேசில் இளைஞரின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு பெற உடன்படிக்கை

சார்ல்ஸ் த மெனசஸ்
லண்டனில் 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் இரு வாரங்களின் பின்னர் பொலிஸாரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட பிரேசிலைச் சேர்ந்த சார்ல்ஸ் த மெனசஸ் அவர்களின் குடும்பத்தினர், தாம் பொலிஸாருடன் நஷ்டஈட்டு உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அந்த சம்பவத்தை அந்த நபரது குடும்பத்தினர் மறக்க விரும்புவதாகவும் கூட்டாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த அந்நபரை தாம் தற்கொலையாளி என்று தவறாக கருதி விட்டதாகவும், அது ஒரு மோசமான தவறு என்றும் ஒப்புக்கொண்டுள்ள லண்டன் பொலிஸார், அதற்கான அனைத்துப் பொறுப்பையும் தாம் ஏற்பதாக கூறியுள்ளனர்.

ஒரு மரண விசாரணை அதிகாரி இந்த மரணம் சட்டவிரோதமான கொலை என்பதை நிராகரித்து விட்டதால், முன்னர் இவரது மரண விசாரணையில் இருந்த ஜூரிக்கள் அவரது மரணத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.

செய்தியரங்கம்
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

இலங்கையில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களை இன்னும் சில மாதங்களுக்குள் முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுசெய்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் தற்பொதைய ஆறுவருட பதவிக்காலம் 2012 நவம்பரில்தான் நிறைவுபெறுகிறது என்றாலும், மக்களிடம் இருந்து புதியதோர் ஆணையைப் பெற ராஜபக்ஷ விரும்புவதாக இலங்கை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெற்ற இராணுவ வெற்றியின் பலனைப் பெறுவதற்காக ராஜபக்ஷ முன்கூட்டியே தேர்தலை நடத்த விரும்புகிறார் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

வரும் ஜனவரி மாத நடுப் பகுதியில் தேர்தல் நடக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு தலைமையேற்று வெற்றித் தேடித்தந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜனரல் சரத் ஃபொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடலாம் என்று ஊகங்ககள் நிலவும் நிலையில், தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.


அயோத்தி மசூதி இடிப்பு: விசாரணை ஆவணம் கசிந்தது தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் அமளி

எல்.கே. அத்வானி
அயோத்தியில் 17 வருடங்களுக்கு முன்னர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் இந்து தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களை சம்பந்தப்படுத்திக் குற்றஞ்சாட்டும் ஆவணம் ஒன்று கசிந்தது குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்செயல்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர்.

அயோத்தியின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்த மூல அறிக்கை ஒன்று ஜூன் மாதத்தில் அரசாங்கத்துக்கு கையளிக்கப்பட்டது.

ஆனால் அதன் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்திய ஊடகங்களுக்கு கசிந்த அறிக்கையின் படி பாரதியஜனதாக் கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரது பெயரை இந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.


ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை மற்றும் ஆப்கானிய அகதிகள் இடையிலான மோதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

கிறிஸ்துமஸ் தீவைக் காட்டும் வரைபடம்
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு குடிவரவு தடுப்பு முகாமில் ஏற்பட்ட ஓர் அடிதடிச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்கள் மற்றும் ஆப்கானியர்களாக கிட்டத்தட்ட 150 பேர் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர்.

மரக்கிளைகளாலும், தும்புத்தடிகளாலும், பிலியர்ட்ஸ் ஆடும் குச்சிகளாலும் போட்டிக் குழுக்கள் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டன.

37 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவர்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட மூவர் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்துக்கு மேலதிக சிகிச்சைக்காக வான் மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டனர்.

நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள அதிகாரிகளுக்கு அரை மணிநேரம் பிடித்துள்ளது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதிய மீன்பிடி விதிகளுக்கு எதிராக தமிழகத் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தியாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டிருக்கும் மீன்பிடி விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை மசோதா, மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பது குறித்து தமிழக மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் நிலையில், தமிழக முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த மசோதா மீனவர் நலனுக்கு எதிராக அமையக்கூடும் என்று முதல்வர் கருணாநிதி அச்சம் தெரிவித்துள்ளார்.

மீனவர்களைக் கலந்தாலோசித்து உரிய மாற்றங்களைச் செய்த பின்னரே இந்த மசோதா முன்னெடுக்கப்பட வேண்டும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாருக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதனை அ.தி.மு.க. எதிர்க்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் நிலையை இப்புதிய சட்டம் மேலும் மோசமாக்கும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010