உலக கோப்பைக்கு முன்பு ஓய்வு பெறுகிறார் முரளிதரன்

உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் உலக கோப்பை போட்டிக்கு முன்பே சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருகிறேன்” என்று இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் கூறினார்.
உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முத்தையா முரளிதரன், டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
131 டெஸ்டில் விளையாடி 788 விக்கெட்டும், 334 ஒரு நாள் போட்டியில் 512 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.
தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் முரளிதரனின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 5 விக்கெட்டே கைப்பற்றியுள்ளார். 396 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதற்கிடையே 2011ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முன்பு முரளிதரன் ஓய்வு பெறலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு 37 வயதாகிறது. என்னால் அதிகமான அளவுக்கு ஓவர்கள் வீச முடியவில்லை. 15 முதல் 16 ஓவர்கள் வரை வீசினாலேயே களைப்பாகி விடுகிறேன். ஆனால் ஒரு நாள் போட்டியில் அப்படி பிரச்சனை இல்லை.
10 ஓவர்கள் தான் வீச வேண்டும் என்றாலும் என்னால் அதிக நாள் விளையாட இயலாது. உலக கோப்பை போட்டிக்கு முன்பே சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருகிறேன் என்று முரளிதரன் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக