JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 24 நவம்பர், 2009

செய்தியறிக்கை


இராக் போர் தொடர்பான விசாரணை ஆரம்பம்
இராக் போர் தொடர்பான விசாரணை ஆரம்பம்

சதாம் ஹூசைனை நீக்குவது தொடர்பான பேச்சுக்களில் பிரிட்டிஷ் அரசு பங்கேற்கவில்லை

சதாம் ஹுசைனை 2001 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பதவியில் இருந்து நீக்குவது குறித்த பேச்சுக்களில் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் விலகியே இருந்தது என்று, இராக் போரில் பிரிட்டனின் தொடர்பு குறித்து விசாரிக்கின்ற அதிகாரபூர்வ விசாரணையில் விசாரிக்கப்படுகின்ற இரு மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது உளவுத்துறையின் உயர் அதிகாரியாக இருந்த சர் பீட்டர் றிக்கட்ஸ் அவர்களும், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரியான சர் வில்லியம் பாற்றி அவர்களும், இராக்கில் ஆட்சி மாற்றம் செய்யும் விவகாரம் எந்த சந்தர்ப்பத்திலும், பிரிட்டனின் கொள்கையின் மையமாக இருக்கவில்லை என்று கூறினார்கள்.

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டொனி பிளயர் உட்பட பல உயர் அதிகாரிகளை விசாரிக்கும் இந்த விசாரணையின் முன்பாக சாட்சியமளித்துள்ள முதல் அதிகாரிகள் இவர்களாவர்.


பிலிப்பைன்ஸில் நடந்த வன்முறைகளில் சடலங்கள் கண்டுபிடிப்பு

கொல்லப்பட்டவர்களின் உடல்
கொல்லப்பட்டவர்களின் உடல்

பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் என்கிற தீவில் நடந்த பெருமளவிலான அரசியல் படுகொலைகளில், குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆழமற்ற புதைகுழி ஒன்றிலிருந்து மேலதிக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து இந்த எண்ணிக்கையை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் நடந்த மிகமோசமான தேர்தல் வன்முறை யைத்தொடர்ந்து, இரண்டு பிராந்தியங்களில் அவசரகால நடைமுறை அமுலாக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உள்ளூராட்சித்தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது கணவரின் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் மனைவி பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

அவரோடு பயணம் செய்துகொண்டிருந்த அரசியல் ஆதரவா ளர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் காணாமல் போயிருக்கிறார்கள்.


பால்மாவில் கலப்படம் தொடர்பாக சீனாவில் இருவருக்கு மரண தண்டனை

கலப்படத்தை தொடர்ந்து சீன பால்மாவுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது
கலப்படத்தை தொடர்ந்து சீன பால்மாவுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது

சீனாவில் 6 குழந்தைகள் உயிரிழந்து முன்னூறுக்கும் அதிகமான குழந்தைகள் சுகவீனமடையக் காரணமான பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவருக்கு சீனா மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தவருக்கு நஞ்சடைந்த உணவை தயாரித்து விற்றதற்காக தண்டனை வழங்கப்பட்டது.

மொத்தமாக 21 பேருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, இந்த வருட முற்பகுதியில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.


எச் ஐ வி தொற்றின் வீச்சு குறைகிறது- ஐ நா தெரிவிப்பு

எச் ஐ வி கிருமி
எச் ஐ வி கிருமி

கடந்த எட்டு ஆண்டுகளில் புதிதாக ஏற்படும் எச் ஐ வி தொற்றின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஐநா மன்றத்தின் அறிக்கை குறிப்புணர்த்தியுள்ளது.

எயிட்ஸ் நோய் எதிர்ப்பில் செயலாற்றிவரும் ஐநா மன்ற அமைப்பின் அறிக்கையில், சஹாராவுக்கு தெற்கே இருக்கும் ஆப்ரிக்க நாடுகளில் தான் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டின் துவக்கத்துடன் ஒப்பிடும்போது, 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய எச் ஐ வி தொற்றுக்களின் எண்ணிக்கை 4 லட்சம் குறைந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எச் ஐ வி தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு இதற்கு காரணமாக இருந்ததாக ஐநா மன்றத்தின் எயிட்ஸ் நோய் தடுப்புப்பிரிவின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் இந்த எயிட்ஸ் நோய் தன்னை தொடர்ந்து தகவமைத்துக்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இதை தடுக்கும் நடைமுறைகள் சென்று அடைவதில்லை என்றும் கவலை வெளியிட்டிருக்கிறார்.

செய்தியரங்கம்
இராணுவத் தளபதிகளுடன் ஜெனரல் பொன்சேகா
இராணுவத் தளபதிகளுடன் ஜெனரல் பொன்சேகா

பொன்சேகாவை வேட்பாளராக முன்னிறுத்துகிறது ஜெ வி பி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் முன்மொழிந்துள்ளதாக ஜெ வி பி கூறியுள்ளது. இதை பிற கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.

அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.


பாதுகாப்பு கோரி பொன்சேகா மனு

ஒய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
ஒய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

தனது பாதுகாப்புக்காக 600 இராணுவ வீரர்களும் 10 வாகனங்களும் 2 குண்டு துளைக்காத வாகனங்களையும் வழங்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறு முன்னாள் இராணுவத்தளபதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாபதிக்கு 2 ஆயிரம் இராணுவ வீரர்களும், பாதுகாப்பு செயலாளருக்கு 500 இராணுவ வீரர்களும், தற்போதைய இராணுவ தளபதிக்கு 600 இராணுவ வீரர்களும். முன்னாள் கடற்படைதளபதி வசந்த கரன்னாகொடவுக்கு 120 இராணுவ வீரர்களும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மேலும் தங்குவதற்கு இடமளிக்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறும் கோரியுள்ளார்

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்களுக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பைவிட குறைந்த பாதுகாப்பு தனக்கு வழங்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 62 இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக தனக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களில் இருபது பேர் சுழற்சி முறையில் சேவையிலிருந்து மாறும் பட்சத்தில் தமது பாதுகாப்புக்ககாக 25 இராணுவ வீரர்களே இருப்பது போதுமானதாக இல்லையென்றும் சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை செய்த தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக 600 இற்கும் அதிகமான இராணுவ வீரர்களை கொண்டு போதூன பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு கட்டளையிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


பாபர் மசூதி இடிப்பு விவகாரம் - விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல்

பாபர் மசூதி இடிக்கப்படும் போது எடுத்த படம்
பாபர் மசூதி இடிக்கப்படும் போது எடுத்த படம்

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் , அந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் அளித்த அறிக்கை, இன்று, செவ்வாய்க்கிழமை, இந்திய நாடாளுமன்றத்தில் அரசால் வைக்கப்பட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசியத் துணைத்தலைவர் வேதாந்தம், இவ்வளவு காலம் கடந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, நீதியை மறுக்கும் செயல் என்றார். அதே போல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே ஊடகங்களில் இந்த அறிக்கை கசியவிடப்பட்டிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். வாஜ்பாய் போன்ற இந்த சம்பவத்தில் சம்பந்தமில்லாத தலைவர்களை இந்த அறிக்கை குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும் என்றார் வேதாந்தம்.

கோவில் கட்டுவதுதான் சங்க பரிவார் அமைப்புகளின் நோக்கமே தவிர மசூதியை இடிப்பது அல்ல என்றும் அவர் கூறினார்.

ஆயினும், அயோத்தியில் ராமர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் கட்டும் திட்டங்களை தங்களது அமைப்புகள் கைவிடாது என்றும், ஆனால் இந்த லட்சியங்களை எட்டுவதில் வன்முறைக்கு இடம் இருக்காது என்றும் வேதாந்தம் தெரிவித்தார்.

"அறிக்கை ஏமாற்றமளிக்கிறது"-- ஜவாகிருல்லா

அரசின் இந்த நடவடிக்கை எடுத்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றார் தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜவாகிருல்லா.

சங்க பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த 68 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணைக் கமிஷன் தெரிவித்திருப்பது, இந்த விஷயம் முன்பே தெரிந்ததுதான் என்றாலும், வரவேற்கத்தகுந்தது என்றும் ஜவாகிருல்லா தெரிவித்தார்.

ஆனாலும், இந்த விசாரணைக்கமிஷன் அறிக்கை மீது அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றங்களால் சரியாகத் தீர்வு காணமுடியாத பிரச்சினயாகிவிட்ட இதற்கு, ஹிந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஜவாகிருல்லா, இந்த விஷயத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டுமென்றால், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் குறித்த நில உரிமை வழக்கு விரைவில் முடிக்கப்பட்ட அதில் கிடைக்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் , அது ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010