JKR. Blogger இயக்குவது.

வியாழன், 31 டிசம்பர், 2009

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
பீட்டர் மூர்
பீட்டர் மூர்

இராக்கில் பிரிட்டிஷ் பிணைக்கைதி விடுவிக்கப்பட்டார்

ஈராக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கும் அதிகமாக பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பீட்டர் மூர் என்ற அந்த நபர் ஒரு கணினி நிபுணராவார். புதன்கிழமை காலை இவர் விடுவிக்கப்பட்டதாகவும் பிறகு அவர் பாக்தாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறைச் செயலர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட மூர் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மிலிபாண்ட் கூறியுள்ளார்.

வன்முறையை விட்டு விலகத் தயாரான ஆயுதக் குழுக்களுடன் இராக்கிய அரசு மேற்கொண்டுவரும் சமரச நடவடிக்கைகள் கராணமாக மூரை விடுவிப்பது சாத்தியமானதாக மிலிபாண்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் இராக்கிய நிதி அமைச்சகத்தில் இருந்து மூரும் அவருடன் இருந்த அவரின் நான்கு மெய் காப்பாளர்களும் கடத்தப்பட்டனர்.


இராக் தற்கொலைத் தாக்குதலில் 23 பேர் பலி

இராக்கின் ரமாடி நகரில் இடம்பெற்ற இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் சில காவற்துறை அதிகாரிகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதலில் அறுபது பேர் வரை காயமடைந்தனர். அதில் அல் அன்பார் பிரதேசத்தின் ஆளுநர் காசிம் முகமதும் காயமடைந்துள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதல் தாக்குதல் பாதுகாப்பு வலயப்பகுதி ஒன்றினுள் இடம்பெற்றுள்ளது. இதற்கு சிறிது நேரத்தின் பிறகு, அந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்குள் சென்ற தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்தார்.

அல் அன்பார் மாகாணம் ஒரு காலத்தில் தீவிரவாதிகளின் பலமான ஒரு தளமாக இருந்தது. எனினும் உள்ளூர் சுனி இன மக்கள் ஆயுததாரிகளுக்கு எதிராக திரும்பியதை அடுத்து அந்தப் பகுதி ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது.

இராக்கில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல்களை நடத்த நாடு ஆயுத்தமாகி வரும் நேரத்தில் இம்மாதிரியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.


இரானில் அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்

ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
இரானில் அரசுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள் அண்மையில் நடைபெற்று வருகின்ற நிலையில், அவற்றுக்கு எதிராக, அரச ஆதரவு போராட்டங்களும் நாட்டின் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் அரசுக்கு ஆதரவான இந்தப் பேரணிகளில் எவ்வளவு பேர் கலந்து கொண்டர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, நாட்டின் தலைநகர் தெஹ்ரானின் சாலைகளில் பெரும் திரளளான மக்கள் இருந்ததை அரச தொலைக்காட்சி காண்பித்தது.

நாட்டில் எதிர்கட்சிகளால் நடத்தப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் மேற்குலகின் தூண்டுதலின் பேரிலேயே நடைபெற்று வருகின்றன என்று இரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கடந்த ஞாயிறன்று எதிர்கட்சியினரால் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது எட்டு பேர் உயிரிழக்க நேரிட்டது.

எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்கள் வெறுக்கத்தக்கவை என்றும், அவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன என்றும் இரானிய அதிபர் அஹ்மடி நிஜாட் வர்ணித்துள்ளார்.


ஆந்திர மாநில வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு

தெலங்கானா ஆதரவு போராட்டம்
தெலங்கானா ஆதரவு போராட்டம்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் தெலங்கானாப் பகுதியில் நடைபெற்ற வேலை நிறுத்தம் அங்கு இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

நாட்டின் பல பாங்களையும் தலைநகர் ஹைதராபாத்துடன் இணைக்கும் சாலைகள் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளன.

தெலங்கானாப் பகுதியில் வன்முறை ஏற்படக் கூடும் என்கிற அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான பேருந்துகளும், 165 க்கும் அதிகமான ரயில் சேவைகளும் அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேலை நிறுத்தம் தொடர்பில் சுமார் 350 பேர் வரை தற்காப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையின் உள்ளூர் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்திலித்திருந்து தெலங்கானா எனும் தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதது.

இந்தப் போராட்டத்துக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயியவாதிகள் இயக்கமும் சில மாணவர்கள் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

செய்தியரங்கம்
ஆர். யோகராஜன்
ஆர். யோகராஜன்

யோகராஜனும் சச்சிதானந்தமும் ஐ.தே.கவில் இணைகின்றனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உப தலைவரான ஆர். யோகராஜன் அவர்கள், அந்தக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்வதாக அறிவித்துள்ளார்.

தற்போது துணை அமைச்சராக இருக்கும் எம். சச்சிதானந்தமும் அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் இடம்பெறுகின்ற இ.தொ.க, மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தினாலேயே தான் அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாகவும் யோகராஜன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை தான் ஆதரிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து யோகராஜன் அவர்களின் செவ்வியையும், அவர்களது விலகல் குறித்து இ.தொ.காவின் தலைவர் முத்து சிவலிங்கம் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இடம்பெயர்ந்த சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடு

பராமரிப்புத் தேவைப்படும் சிறார்கள்
பராமரிப்புத் தேவைப்படும் சிறார்கள்
இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்தவர்களுக்கான வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள வலது குறைந்த மற்றும் பராமரிப்பு தேவைப்படுகின்ற குழந்தைகள் 500 பேரை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிற்கு அனுப்பி பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீதி அமைச்சு மற்றும், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அனுமதியுடன், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடாக இந்தச் சிறுவர்கள் இன்று கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் இன்று கையளிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மனிக்பாம் முகாமில் நடைபெற்ற இந்தக் கையளிப்பு வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

இந்தக் குழந்தைகளின் முதல் தொகுதியாக 170 பேர் இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற அமைப்பின் தலைவராகிய டாக்டர் பாலசுந்தரம் அனந்த்குமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புலோலி தெற்கில் உள்ள உபய கதிர்காமம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் கிராமத்தில் வைத்து இந்தச் சிறுவர்கள் பராமரிக்கப்படவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்
வெளிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா மிகவும் பிரபலமான இடமாக இருந்துவந்தது.

கடந்த 7 வருடங்களில் அங்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 41 வீதத்தால் அதிகரித்து வந்தது.

ஆனால், கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் இந்தப் போக்கை தலைகீழாக மாற்றிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களின் கூட்டமைப்பின் தலைவர் கௌதம் குப்தா. இந்திய மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில இனவாத தாக்குதலாக பார்க்கப்பட்டதாக கூறுகிறார்.

இந்திய ஊடகங்களில் இந்தத்தாக்குதல்கள் குறித்து பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை இனவாத தாக்குதல்கள் என்ற வகையில் ஊடகங்கள் அவற்றைக் கையாண்டதால், அது, இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் அந்தஸ்துக்கு ஒரு பெரிய அடியாக அமைந்துவிட்டது.

இந்திய மாணவர்களால் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற வருமானம் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமானதாகும்.

கடந்த மாதம் சந்தைப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் அவர்கள் இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அவர் அங்கு மேற்கொண்ட பல விடயங்களில் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வருவதை ஊக்கப்படுத்துவதும் ஒன்றாக இருந்தது.

அனைத்து மாணவர்களின் பாதுகாப்புக்கும் தான் பொறுப்பு என்று பிரதமர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010