JKR. Blogger இயக்குவது.

திங்கள், 30 நவம்பர், 2009

மன்னார் மறை மாவட்ட ஆயருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடல்.

கத்தோலிக்க திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து இருந்து மன்னார் மற்றும் விடத்தல் தீவுப்பகுதிகளில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு அம்மக்களின் தேவைகள் குறித்து தான் அறிந்து கொண்டதாக மன்னார் ஆயர் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மோதல்களின் போது இடம்பெயர்ந்த சமயம் தமது வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்களை கைவிட்டு விட்டு வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்ட மக்களின் நிலைமைகளை எடுத்துக் கூறிய மன்னார் ஆண்டகை தமது வாகனங்களின் உரிமைப்பத்திரம் மற்றும் சாவிகளை தம்வசம் வைத்திருப்பதாகத் தெரிவித்தவர்கள் தமது வாகனங்களை மீளவும் பெற்றுக்கொள்ள உதவுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் ஆலோசனையுடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆண்டகையிடம் தெரிவித்தார்.

விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரித்து பிரச்சாரங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஆண்டகையிடம் தெரிவித்த அமைச்சர் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அவர்களது அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் தமிழ்மக்களின் 75 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் இணக்கம் தெரிவித்துள்ளதனையும் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மக்களுக்கான தனது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும் ஆண்டகையிடம் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் சுவிற்சர்லாந்து நகரில் நடைபெற்ற அனைத்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் மாநாடு பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பாக நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை கட்சிகளின் பிரதிநிதிகள் முன் வைத்ததுடன் சுயநிர்ணய அடிப்படையில் பிரிவினை கோரும் தீர்மானங்களுக்கு தம்மை நிர்ப்பந்தித்ததாகவும் இது தமிழ் மக்களை மீண்டும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதால் அக்கோரிக்கைகளுக்குத் தான் உடன்படவில்லை என்பதையும் மன்னார் ஆண்டகையிடம் தெரிவித்தார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010