JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்பு
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010