JKR. Blogger இயக்குவது.

புதன், 11 நவம்பர், 2009

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
கொலையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
கொலையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜெர்மனி நீதிமன்றத்தில் கர்ப்பிணியை கொன்றவருக்கு ஆயுட் தண்டனை

கர்ப்பிணியான, முகத்திரையிட்ட ஒரு எகிப்தியப் பெண்ணை கொலை செய்ததற்காக ஜெர்மனிய நீதிமன்றம் ஒருவருக்கு ஆயுட்தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கு எகிப்திலும் முஸ்லிம் உலகிலும் பெரும் ஆத்திரத்தை கிளறியிருந்தது.

தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த மர்வா எல் ஷெரிபினி என்ற பெண்ணை டிரஸ்டனில் உள்ள இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட இதே நீதிமன்றத்தின் அமர்வு ஒன்றில் வைத்து, ரஷ்யாவில் பிறந்த ஜெர்மனியரான அலெக்ஸ் வெயின் என்பவர் சமயலறைக் கத்தியால் குத்தினார்.

அந்தப் பெண்ணை இன மற்றும் மத ரீதியாக அவமதித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றில், தனக்கு கிடைத்த தண்டனைக்கு எதிராக அப்போது வெயின் மேன்முறையீட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த குற்றத்தின் கொடூரத்தன்மையைக் கொண்டு பார்க்கும் போது வெயின் முன்னதாக விடுதலை செய்யப்படக் கூடாது என்று நீதிமன்றம் குறிப்பாகக் கூறியிருந்தது.


ஆப்கானுக்கான பாதுகாப்பு உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை

ஆப்கானுக்கு உறுதி வழங்கப்பட்ட சர்வதேச உதவிகளை தாம் பெறும் பட்சத்தில், இன்னும் நான்கு வருடங்களுக்குள் நாட்டின் பாதுகாப்புக்கான பொறுப்பை சர்வதேசப் படைகளிடம் இருந்து தாம் ஏற்க முடியும் என்று ஆப்கானிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் படைகளுக்கு யுத்த தாங்கிகள் மற்றும் விமானங்கள் போன்ற தளபாடங்கள் மற்றும் பயிற்சிகள் ஆகியவை மேலதிகமாக தேவைப்படுவதாக ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் முகமட் ஷஹிர் அஷ்மி கூறியுள்ளார்.

ஆப்கானுக்கு சர்வதேச படைகளின் ஆதரவு மிகவும் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்பதுடன் சட்டத்தின் ஆட்சி மற்றும் புனரமைப்பு ஆகியவை போன்ற விடயங்களிலும் முன்னேற்றம் அவசியம் என்று நேட்டோ தலைமையிலான படைகளின் தலைவர் கூறியுள்ளார்.


ஆப்கானுக்கு அதிக படையை அனுப்புவது குறித்து ஒபாமா விவாதிக்கிறார்

ஆப்கானில் அமெரிக்கப் படைகள்
ஆப்கானில் அமெரிக்கப் படைகள்
ஆப்கானில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக தனது பாதுகாப்பு குழுவுடன் முக்கிய கூட்டம் ஒன்றை ஒபாமா நடத்திவருகிறார்.

இது தொடர்பாக நான்கு வழிகள் ஆராயப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை கூறுகிறது. இவையனைத்தும் கூடுதல் படையினரை அங்கு அனுப்புவதை மையமாகக் கொண்டவை என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆப்கானுக்கு 30,000 முதல் 45,000 துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற யோசனைக்குத்தான் கூடுதலான ஆதரவு இருப்பதாக பிபிசியின் பாதுகாப்பு நிபுணர் கூறுகிறார்.

ஆனால் ஒபாமா தூர கிழக்கு நாடுகளுக்கான தனது பயணத்தை அடுத்த வாரம் முடித்து திரும்பும்வரை இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படாது என்றே எதிர்பார்கப்படுகிறது.


ஆப்பிரிக்காவில் புகைத்தல் அதிகரிப்பது குறித்து கவலை

தன்சானியாவில் நடக்கும் புற்றுநோய் குறித்த மாநாட்டில் ஆராயப்பட்ட விடயங்களில் ஆப்பிரிக்காவில் புகைத்தல் பழக்கம் அதிகரிப்பதும் அடங்குகிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் புகைப்பவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால், அங்கு புற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது போய்விடும் என்று இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க கான்சர் சொசைட்டி கூறியுள்ளது.

தற்போதைய போக்கு தொடருமானால், பல ஆப்பிரிக்க நாடுகள் அடுத்த 12 வருடத்தில் தமது புகையிலை பயன்பாட்டை இருமடங்காக அதிகரிக்கும் என்று அந்தத குழு கூறியுள்ளது.

அருகில் இருப்பவர் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பபித்துக்கொள்ள அந்த கண்டத்தில் உள்ள 90 வீதமான மக்களுக்கு பாதுகாப்பு ஏதும் கிடையாது என்றும் அது கூறுகிறது.

செய்தியரங்கம்
வவூனியா முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்படும் மக்கள்
சமீப காலமாக மீள் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது

துணுக்காயில் கல்வி உள்ளிட்ட பல சேவைகள் துவக்கம்

இலங்கையின் வன்னிப்பிரதேசமாகிய முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்பதற்காக யோகபுரம் மகாவித்தியாலயம் செவ்வாய் கிழமை முதல் செயற்படத் தொடங்கியுள்ளது என்றும், நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று அந்தப் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாகவும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தம்பிராஜா மேகநாதன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, துணுக்காய் பகுதியில் இரண்டு உப அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பதாகக் கூறும் வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் வி.குமரகுரு அவர்கள், மக்கள் குடியேறியுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலும் அஞ்சல் அலவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன என தெரிவித்திருக்கின்றார்.

துணுக்காய் பிரதேச பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான காய்கறிகள், எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கென ஏற்கனவே நான்கு கிளைகளைத் திறந்து செயற்பட்டு வருவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தம்பிப்பிள்ளை பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


திருகோணமலையில் 2006 முதல் 109 பேர் காணமல் போயுள்ளனர்- ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்

சில மாதங்களுக்கு முன்பு கடத்திக் கொலை செய்யப்பட்ட பள்ளி சிறுமி
கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பள்ளி மாணவி

இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவுகளில் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 109 பேர் காணாமல் போனதாகவும், 82 பேர் கடத்தப்பட்டதாகவும், இலங்கையில் காணாமல் போனவர்கள், மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையர், முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ண தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உண்மையறியும் நடவடிக்கைகளை நடத்திய பின்னர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

தனது விசாரணைகளின் போது காணாமல் போனவர்களில் இளம் மனைவிமாரே அதிகமாக சாட்சியம் அளிக்க வந்ததாகவும் அவர் கூறினார்.

அவர்களது நிலைமை மிகவும் சோகமானதாக இருந்ததாகவும், அவர்களில் பலர் வாழ வழியில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடத்தப்பட்டவர்களில் சிலரைக் கொண்டு சென்ற வெள்ளை நிற வான்கள் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளின் ஊடாகவே எந்தவிதமான சோதனையும் இன்றியே சென்றதாக சாட்சியங்களில் சில குற்றஞ்சாட்டியதாகவும் மஹாநாம கூறியுள்ளார்.


இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் -இடதுசாரிகளுக்கு பின்னடைவு

பிரதமர் மன்மோகன் சிங்குடன் சோனியா காந்தி
பிரதமர் மன்மோகன் சிங்குடன் சோனியா காந்தி

ஏழு மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன. மேலும், உத்தரப் பிரதேசத்தில், மக்களவைத் தொகுதி ஒன்றிலும் காங்கிஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதே நேரத்தில், இடதுசாரிக் கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூடக்கிடைக்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தில், பிரோஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், முன்னாள் நடிகரும், காங்கிரஸ் வேட்பாளருமான ராஜ் பாபர், சமாஜவாதி கட்சி வேட்பாளரும் அக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவையைப் பொருத்தவரை, உத்தரப் பிரதேசத்தில், 11 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 10 தொகுதிகளுக்கும், கேரளத்தில் மூன்று தொகுதிகளுக்கும், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா இரு தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் ஒரு தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

கேரளத்தில், மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி தக்கவைத்துக் கொண்டது..

மேற்கு வங்கத்தில், பத்தில் ஏழு தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் காங்கிரஸும், ஒன்றில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் கூடக் கிடைக்காத நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான ஃபார்வர்டு பிளாக்கிற்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை, கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இடைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறற்றுள்ளது.

தேர்தல் நடந்த 11 தொகுதிகளில் ஏழு தொகுதிகளை மாயாவதி கட்சி கைப்பற்றியுள்ளது. முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010