செய்தியறிக்கை
| |
பிரிட்டிஷ் படையினர் |
இராணுவத்தினர் மீதான புகார்களை பிரிட்டன் மறுத்துள்ளது
இராக்கிலே பிரிட்டிஷ் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் புதிய புகார்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுவதை பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கான அமைச்சக அதிகாரி பில் ரம்மெல் மறுத்துள்ளார்.
புதிதாக முப்பது புகார்கள் வெளிவந்துள்ளதாக முன்னதாக வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். அமெரிக்க துருப்பினர் கைகொண்டதாக வெளிவந்திருந்த பாலியல் துன்புறுத்தல் வழிவகைகள் போன்றவையும் புதிய புகார்களிலே பலவற்றில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்தப் புகார்களில் பல புதியவையே அல்ல என்று கூறியுள்ள அதிகாரி ரம்மெல், புகார்களில் தெரிவிக்கப்பட்டிருப்பவைதான் நடந்த விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார்.
பிரிட்டிஷ் துருப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் பரவலாகவே துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது; ஆனால் புகார்கள் ஒழுங்காக விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ஒபாமா
| |
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ஒபாமா |
அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசிய பசுபிக் வலய நாடுகளின் தலைவர்களை சிங்கப்பூரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த தனது தனிப்பட்ட கரிசனையாக ஒபாமா இந்த சந்திப்பை நடத்தியுள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஊக்குவிப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின் உறுப்பினர்கள் இதுவரை ஆராய்ந்துள்ளனர்.
சீனா ஏறு முகத்தை நோக்கி செல்கின்ற வேளையில், அதிகார சமநிலையை கையாள்வதே இந்த
பிராந்தியத்தில் உள்ள முக்கிய பிரச்சனை என பி.பி.சியின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த நாடுகள் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக அமெரிக்க சந்தைகளையே எதிர்பார்த்துள்ளதாகவும், அதிபர் ஒபாமாவிடமிருந்து உறுதியான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் வடமேற்கில் தொடரும் குண்டுவெடிப்புகள்
| |
பாகிஸ்தான் இராணுவத்தினர் |
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் நடந்துள்ள ஓர் குண்டுவெடிப்பில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பெஷாவர் நகரில் ஒரு பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிவந்து தற்கொலை குண்டுதாரி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி ஸர்தாரி இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். தீவிரவாதிகளை நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட வேண்டும் என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமையன்று பெஷாவர் நகரில் முக்கிய உளவுத் துறையுடைய ஓர் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தற்கொலை கார்குண்டுத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
உளவு குற்றச்சாட்டுகளை சிலி மறுத்துள்ளது
| |
சிலி வரைப்படம் |
பெரு தொடர்பில் உளவு பார்த்ததாக சிலி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அந்த நாடு மறுத்துள்ளது.
தனது அண்டை நாடுடான உறவுகள் தொடர்பில் எந்த விதமான சட்ட விரோத நடவடிக்கைகளிலும் தமது நாடு ஈடுபடவில்லையென சிலி வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார்.
பெரு நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவருக்கு பணம் செலுத்தி தேசிய இரகசியங்களை பெற முற்பட்டதாக குற்றஞ்சாட்டி சிலி நாட்டு படைஅதிகாரிகள் இருவருக்கு பெரு நீதிமன்றம் ஒன்று பிடியணை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து பெருநாட்டு அதிபர், சிலி அதிபரை பேச்சுவார்த்தைக்காக வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலும் நீண்டகாலமாக கடல் எல்லை தொடர்பில் முறுகல் நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| |
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி |
இலங்கையில் அரசியல் தீர்வால் மட்டுமே மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் - இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கையில் அரசியல் தீர்வு திட்டமொன்று ஏற்படுவதன் மூலம் மட்டுமே இன-மத அடையாளங்களால் வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மறைந்த லக்ஷ்மண் கதிர்காமரின் நான்காவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றிய போது அவர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.
பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் தங்கியிருக்க சம்மதம்
| |
இந்தோனேசிய வரைப்படம் |
ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறும் முயற்சியாக பயணித்த வேளையில் பிடிபட்டிருந்த இலங்கை அகதிகள், இந்தோனேஷியாவின் மெரக் துறைமுகத்தில் ஒரு மரப் படகிலிருந்தும், வைக்கிங் ஓஷியானிக் என்ற ஆஸ்திரேலியக் சுங்கத்துறை கப்பலில் இருந்தும் கடந்த ஒரு மாதகாலமாக இறங்க மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது சிங்கப்பூரின் பிண்டான் தீவை ஒட்டிய கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஓஷியானிக் கப்பலில் உள்ள 78 தமிழ் அகதிகளில் இருபத்து இரண்டு பேர் கீழிறங்கி, தன்ஜுங் பினாங் பகுதியில் உள்ள இந்தோனேஷிய தடுப்புக் காவல் மையத்தில் தங்கியிருக்க சம்மதித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆறு வார காலத்திற்குள் ஆஸ்திரேலியாவில் குடியேற இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலியா உறுதிமொழி வழங்கியதை அடுத்து இந்த 22 பேர் கீழிறங்கியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை ஆஸ்திரேலியா அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் என்று கருதுவதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் இவான்ஸும் முன்னதாக கூறியிருந்தார்.
ஜெய்ப்பூர் ரயில் விபத்தில் 7 பேர் பலி
| |
இந்திய ரயில்கள் |
இந்தியாவின் வடமேற்கே விரைவு ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
ஜெய்ப்பூர் நகருக்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மிக அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் சாரதி, போதிய வெளிச்சம் இன்மையால் திடீரென ரயிலை நிறுத்த முற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் தண்டவாளங்களின் பராமரிப்பில் உள்ள குறைபாடு காரணமாக இந்தியாவில் இரயில் விபத்துக்கள் இடம்பெறுவது சர்வ சாதாரணமாகி விட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக