JKR. Blogger இயக்குவது.

புதன், 3 பிப்ரவரி, 2010

நளினி விடுதலை குறித்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆய்வு குறித்த அறிக்கையை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான சிறை ஆலோசனைக் குழு தமிழக அரசுக்கு அனுப்பி விட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட சிறை ஆலோசனைக் குழு, சமீபத்தில் நளினியை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியது. அப்போது தனது துயர நிலையை விளக்கி எட்டு பக்க மனுவை கொடுத்தார் நளினி.

இதையடுத்து அவரை முன்கூட்டியே விடுவிக்கலாம் என்று சிறை ஆலோசனைக் குழு பரிந்துரைக்கும் எனத் தகவல் வெளியிடப்பட்டது.

இதற்கு சுப்பிரமணியசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பி விட்டதாக வேலூர் ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று இந்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திரன் தலைமையிலான குழுவில் அவர் தவிர, மாவட்ட நீதிபதி கலையரசன், சிறை கண்காணிப்பாளர் சேகர், பிராந்திய சிறை அதிகாரி கிருஷ்ணநாமகிரி, சிறை மற்றும் சீர்திருத்த அகடமியின் விரிவுரையாளர் பியூலா இம்மானுவேல் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

அறிக்கை குறித்து ராஜேந்திரன் கூறுகையில்,

"நளினி மற்றும் ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரது வழக்கு விவரங்கள் முழுமையாக ஆராயப்பட்டன. இவர்கள் தவிர 14 ஆண்டு சிறைக் காலத்தைக் கழித்த பிற எட்டு சிறைக் கைதிகள் குறித்தும் ஆராயப்பட்டது. ஒவ்வொருவர் குறித்த வழக்கின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தனித் தனியாக அறிக்கை தயாரிக்கப்பட்டது.

சிறையில் அவர்களது நடத்தை, அவர்கள் மீதான புகார், தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன" என்றார்.

அறிக்கையில் என்ன மாதிரியான பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை ராஜேந்திரன் தெரிவிக்க மறுத்து விட்டார். இருப்பினும், விடுவிக்கலாம் என்ற பரிந்துரை இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி நளினியை முன்கூட்டியே விடுவிப்பதா, இல்லையா என்ற முடிவை தமிழக அரசுதான் எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010