JKR. Blogger இயக்குவது.

சனி, 6 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


விசாரணையை எதிர்நோக்கும் நால்வர்
விசாரணையை எதிர்நோக்கும் நால்வர்

பிரிட்டனின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்கு

பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்குபேர் தங்களின் செலவினங்களுக்காக அரசிடமிருந்து பெற்ற தொகையில் தவறு செய்ததாக கூறப்பட்டு, இதற்காக அவர்கள்மீது குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தங்களின் செலவினங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதாக வெளியான செய்திகளை தொடர்ந்து பிரிட்டிஷ் பொதுமக்கள் மத்தியில் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவுக்கு கோபம் உருவானது.

இது தொடர்பில் ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், பிரதான எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் அரசு தரப்பு வழக்குகளுக்கான இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற நடைமுறைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்க முடியாது என்கிற நாடாளுமன்ற உரிமைகள் தொடர்பான விதியின் கீழ் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை இருந்துவரும் பாதுகாப்பு நடைமுறையும், இந்த நான்குபேர் மீதான வழக்குகளின் போது நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.


வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது

வட அயர்லாந்து உடன்பாடு தொடர்பாக இணக்கப்பாடு
வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வுக்கு இணக்கப்பாடு
வட அயர்நால்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்பாட்டை காப்பாற்றும் விதமாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தினை பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்தின் பிரதமர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த உடன்பாடு வட அயர்லாந்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஷின் ஃபெயின் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி ஆகிவகைகளிடையே ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்து முழுமையாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பது ஷின் ஃபெயின் கட்சியின் நிலைப்பாடு, ஆனால் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியோ பிரிட்டனுடன் உறவை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டுள்ளது.

வட அயர்லாந்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள் லண்டனில் இருக்கும் பிரிட்டனின் மத்திய அரசிடமிருந்து ஃபெல்பாஸ்ட்டில் இயங்கும் மாகாண அரசுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி மாற்றப்படும்.

இந்த அதிகார மாற்றத்தை ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி இதுவரை காலமும் எதிர்த்து வந்தது.

ஷிண் ஃபெயின் கட்சியின் போராளிகள் அமைப்பான ஐ ஆர் ஏ வின் முன்னாள் போராளித் தளபதிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நேரிடும் என்று ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்து வந்தது.


பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பில் 22 பேர் பலி பலர் காயம்

பாகிஸ்தானில் பயங்கர தாக்குதல்
பாகிஸ்தானில் இரண்டு பயங்கர குண்டுத் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன
பாகிஸ்தானின் கராச்சி நகரில் மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முதல் சம்பவத்தில்,வெடிமருந்துகள் நிரம்பியிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஷியா இன மக்களை ஒரு மத ஊர்வலத்துக்கு ஏற்றிச் சென்ற பேருந்து மீது மோதியதில், 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஒரு மணிநேரத்துக்கு பின்னர், இந்த முதல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே மற்றுமொரு மோட்டார் சைக்கிள் வெடித்ததில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் மிகப்பலத்த பாதுகாப்பு இருந்தும் இந்தக் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருப்பதாக இஸ்லாமாபாதில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.


வாகன குறைபாடுகளுக்காக மன்னிப்பு கோரியது டொயோட்டா

சிக்கலில் டொயொட்டா நிறுவனம்
சிக்கலில் டொயோட்டா கார் நிறுவனம்

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவின் தலைவர், தமது வாகனங்களில் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட கோளாறுகளுக்காகவும் அதனால் பொதுமக்கள் மத்தியில் உருவான கவலைகளுக்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார்.

இதனால் தமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக தாம் மன்னிப்பு கோருவதாக டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயொட்டா அவர்கள் கூறியுள்ளார்.

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த தவறுகளை சரிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இதற்காக உலக அளவிலான தர மேம்பாட்டுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வாகனங்களின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கான வேக அழுத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தனது தயாரிப்பான 80 லட்ச வாகனங்களை டொயோட்டா ஏற்கெனவே திரும்பப்பெற்று வருகிறது.

ஆனால் டொயோட்டாவின் பிரியஸ் வாகனத்தை நிறுத்துவதற்கான கருவியில் கோளாறு இருப்பதாக அமெரிக்க அரசு விசாரித்துவரும் நிலையிலும் அந்த ரக வாகனங்களை அந்த நிறுவனம் இன்னமும் திரும்பப்பெறவில்லை

செய்தியரங்கம்
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள்
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள்

இலங்கையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடையாமை மற்றும் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மீளக்குடியமர்பவர்களுக்கு உடனடியாகத் தேவையான தற்காலிக வீடுகளை அமைப்பதற்குரிய கூரைத்தகடுகளின் கையிருப்பு முடிவடைந்ததன் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமடைந்ததாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான கூரைத்தகடுகள் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சினால் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் அவசரகாலச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது

மீண்டும் அவசரகால சட்டம் நீட்டிப்பு
அவசரகால சட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்தப் பிரேரணை தொடர்பான விவாதங்களின் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 102 உறுப்பினர்களும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது.

அதேவேளை, நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அரச உடைமைகளின் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாகப் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.

மாறுபட்ட கருத்துக்கள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சுமுகமாக நடத்தும் நோக்கிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை களையும் நோக்கிலுமே இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தான் கருதுவதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், சட்டத்தின் ஆட்சியை கட்டுப்படுத்தி முடிவுகளை எடுப்பதற்கான நடைமுறையாகவே இதை பார்க்க வேண்டும் என கருத்து வெளியிடுகிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பாலகிருஷ்ணன்.


பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ நா அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது-இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
பருவநிலை மாற்றம் தொடர்பிலான ஐநா சபையின் உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான உயர்மட்டக்குழுவின் சமீபத்திய அறிக்கைகளில் காணப்பட்ட தவறுகள் மிகப்பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.

குறிப்பாக அந்த அமைப்பின் தலைவர் முனைவர் ராஜேந்திர பச்சௌரி அவர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் அந்த அமைப்பின்மீது தாங்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் தொடர்பிலான ஐநா மன்ற செயற்பாடுகள் சமீபகாலங்களின் சாதித்ததைவிட சர்ச்சையில் சிக்கியதுதான் அதிகம். உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோபன் ஹேகன் மாநாட்டில் உலக நாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தம் ஏற்படாதது கடந்த ஆண்டின் மிகப்பெரும் தோல்வி யாக பார்க்கப்பட்டது.

அந்த பின்னடைவிலிருந்து ஐநா மன்றமும், பருவநிலைக்கான அதன் உலக அளவிலான அமைப்பும் மீள்வதற்குள் அந்த அமைப்பின் பருவநிலை தொடர்பான விஞ்ஞான நடவடிக்கைகளும், அது தொடர்பிலான அதன் அறிக்கைகளில் காணப்பட்ட தவறுகளும் பெரும் சர்ச்சையில் சிக்கின.

இது தொடர்பிலான விரிவான தகவலை இன்றைய செய்தியரங்கில் கேட்கலாம்.


தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினர்-பாகிஸ்தான் சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்

தற்கொலை குண்டுதாரியாக நிர்பந்திக்கப்பட்ட மீனா
தற்கொலை குண்டுதாரியாகும்படி நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறும் சிறுமி மீனா
தற்கொலை குண்டுதாக்குதல்கள் வாடிக்கையாகி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணப்பகுதியிலிருந்து ஒரு பஷ்டூன் இனச் சிறுமி, தன்னைத் தற்கொலைக் குண்டுதாரியாகுமாறு நிர்ப்பந்தித்த தனது குடும்பத்தினரிடமிருந்து தப்பி வந்து தனது கதையை பிபிசியிடம் கூறியிருக்கிறார்.

இவரது கருத்துக்களை பக்கச்சார்பற்ற வகையில் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், பாகிஸ்தான் போலிசார் இவரது இந்தக் கதை உண்மையாக இருக்கக்கூடும் என்று தாங்கள் நம்புவதாகவும், அவர் அளிக்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை என்றும் கூறுகின்றார்கள்.

“நீ தற்கொலை குண்டுதாரியாகி இறந்தால், எங்களை விட முன்னதாக சொர்க்கத்துக்கு போவாய்" என்று அந்தப் பெண்ணின் சகோதரனும் தந்தையும் கூறியுள்ளனர்.

இவரது இளைய சகோதரியும் இந்த மாதிரி தற்கொலை குண்டுதாரியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பாகிஸ்தான் சிறுமி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் குறித்து இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010