JKR. Blogger இயக்குவது.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தமிழ்நாட்டுக்கு ஒப்பான ஒரு தாயகத்தை ஈழத்தமிழினம் காண விரும்புகின்றது: கருணாநிதியிடம் உ.த.ப. இயக்கம் விண்ணப்பம்


உங்கள் காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு ஒப்பான ஒரு தமிழ்ர் தாயகத்தை ஈழத்தமிழினம் காண விரும்புகின்றது. இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் தலைமை அலுவலகம் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ள விண்ணப்பம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இணக்கம் கலைஞருக்கு அனுப்பியுள்ள விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இலங்கையில் எமது தமிழர் தாயகத்தில் வாழ்ந்து வரும் நமது மக்கள் அனுபவித்த வார்த்தைகளால் வடிக்க முடியாத துன்பங்கள் இழப்புக்கள் ஆகியவற்றின் தாக்கங்களின் மத்தியிலும் இன்னமும் தமது நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பது உங்கள் தமிழ் நாட்டின் மீதுதான். அந்த தமிழ் நாட்டின் பலமிக்க முதல்வராகவும் காவலராகவும் உள்ள உங்கள் ஆட்சிக் காலத்தில் தான் தங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று நமது தாயக மக்கள் எதிர்பார்ப்போடு உள்ளார்கள். இதைப்போலவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்களும் நம்பிக்கைகளை தாங்கியபடி உள்ளார்கள்.

எனவே உங்கள் காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு ஒப்பான ஒரு தமிழ்ர் தாயகத்தை ஈழத் தமிழினம் காண விரும்புகின்றது. இதற்கான முன்னெடுப்புக்களையும் தீர்மானங்களையும் மிகவிரைவில் நடைபெறவுள்ள உங்கள் கட்சியின் ஆட்சிக் குழுக் கூட்டத்தில் முன்மொழிந்து அதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து எங்கள் கனவுகளை நனவாக்குங்கள்” இவ்வாறு உலகத்தமிழ் பண்பாட்டு இயகத்தின் தலைமை அலுவலகம் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ள விண்ணப்பம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு கணேசலிங்கமும் இயகத்தின் சர்வதேச ஊடகத் தொடர்பாளர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து அனுப்பி வைத்துள்ள மேற்படி விண்ணப்பத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் நீங்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்த பாராளுமன்ற குழுவிடம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு விரைவில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யப்படும் என்று உறுதியளித்ததை நாம் இந்த சந்தர்ப்பத்தில் தங்கள் மேலான கவனத்திற்க ஞாபகப்ப்படுத்த விரும்புகின்றோம்.

நமது மக்கள் மீதான உங்கள் அக்கறையும் கவனிப்பும் வெளிப்படும் வண்ணம் அடிக்கடி நீங்கள் தமிழ்நர்ட்டில் இருந்த வண்ணம் வெளியிடும் அறிக்கைகளையும் எண்ணங்களையும் நமது மக்கள் உலகெங்கும் வாழ்ந்தபடி அவதானித்த வண்ணம் உள்ளார்கள். அந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த விண்ணப்ப்ததை நாம் தங்கள் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.

ஐயா, நீங்கள் மனது வைத்தால் பல விடயங்களை எமது மக்களுக்காகச் செய்யலாம். அதுவும் உங்கள் காலத்திலேயே செய்து முடிக்கலாம். இந்தியாவின் மத்திய அரசாங்கமாக உள்ள காங்கிரஸ் அரசு தற்போது இலங்கையில் குறிப்பாக வட பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிகின்றோம். விமான நிலையம், அன்னை இந்திரா காந்தி நினைவான பல்கலைக் கழகம் ஆகியனவும் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் இவ்வாறான திட்டங்களால் நமது மக்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். அங்கு உங்கள் இந்திய அரசாங்கம் எந்த அபிவிருத்தியை மேற்கொண்டாலும் அது இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமே நன்மை பயக்கும் விடயமாக அமையுமே தவிர நமது மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்கின்ற திட்டங்களாக அமையாது.

எனவே நமது மக்களுக்கு அதிகாரப் பகிர்வுகளை வழங்கும் வகையில் இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் இந்தியாவின் மத்திய அரசிடமிருந்து அதிகளவில் கொடுக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்யவேண்டும்.

உங்கள் நாட்டில் உங்கள் முயற்சியால் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்து கிடைத்துள்ளது. இதைப்போன்ற பல நல்ல அம்சங்கள் உங்கள் காலத்தில் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இடம்பெற்றுள்ளன. அதைப்போன்ற ஒரு மாற்றம் நமது தாயகத்திலும் இடம்பெற வேண்டும். அதை நிறைவேற்றுவதற்கு தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

எனவே மிகவிரைவில் கூடவுள்ள உங்கள் கட்சியின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் நமது மக்களின் விடிவுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் தூணாக நிற்கக் கூடிய தீர்மானங்களை எடுத்து அதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேச்ஙகளில் நமது மக்கள் அரசியல் அதிகாரங்களை தங்க்ள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள. இதன் மூலம் உங்கள் தமிழ்நாட்டுக்கு ஒப்பான தமிழர் தாயகம் ஒன்று அமைவதை உறுதி செய்யுங்கள்”

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010